திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 92

திருப்பாடல்கள் 92

திருப்பாடல் 92

புகழ்ச்சிப் பாடல்

ஓய்வு நாளுக்கான புகழ்ப்பாடல்

1 ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று; உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.

2 காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்

3 பத்துநரம்பு வீணையோடும் தம்புரு, சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று.

4 ஏனெனில், ஆண்டவரே! உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்; உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து நான் மகிழ்ந்து பாடுவேன்.

5 ஆண்டவரே! உம் செயல்கள் எத்துணை மேன்மையாவை; உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.

6 அறிவிலிகள் அறியாததும் மூடர் உணராததும் இதுவே:

7 பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்; தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்! ஆனால், அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவரே;

8 நீரோ ஆண்டவரே! என்றுமே உயர்ந்தவர்.

9 ஏனெனில், ஆண்டவரே! உம் எதிரிகள் – ஆம், உம் எதிரிகள் – அழிவது திண்ணம்; தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டுபோவர்.

10 காட்டைருமைக்கு நிகரான வலிமையை எனக்கு அளித்தீர்; புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.

11 என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டேன்; எனக்கு எதிரான பொல்லார்க்கு நேரிட்டதை நான் காதாரக் கேட்டேன்.

12 நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர்.

13 ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர்.

14 அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;

15 'ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை; அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர்.