திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 142

திருப்பாடல்கள் 142

திருப்பாடல் 142

உதவிக்காக மன்றாடல்

1 ஆண்டவரை நோக்கி அபயக்குரல் எழுப்புகின்றேன்; உரத்த குரலில் ஆண்டவரின் இரக்கத்திற்காக வேண்டுகின்றேன்.*

2 என் மனக்குறைகளை அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்; அவர் திருமுன்னே என் இன்னலை எடுத்துரைக்கின்றேன்;

3 என் மனம் சோர்வுற்றிருந்தது; நான் செல்லும் வழியை அவர் அறிந்தேயிருக்கின்றார்; நான் செல்லும் வழியில் அவர்கள் எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.

4 வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்; என்னைக் கவனிப்பார் எவருமிலர்; எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று; என் நலத்தில் அக்கறை கொள்வார் எவருமிலர்.

5 ஆண்டவரே! உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; 'நீரே என் அடைக்கலம்; உயிர் வாழ்வோர் நாட்டில் நீரே என் பங்கு'.

6 என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்; ஏனெனில், நான் மிகவும் தாழ்த்தப்பட்டுள்ளேன்; என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமைமிக்கோர்.

7 சிறையினின்று என்னை விடுவித்தருளும்; உமது பெயருக்கு நான் நன்றி செலுத்துவேன்; நீதிமான்கள் என்னைச் சூழ்ந்து நிற்பார்கள்; ஏனெனில், நீர் எனக்குப் பெரும் நன்மை செய்கின்றீர்.

குறிப்புகள்

* 142 தலைப்பு = 1 சாமு 22:1; 24:3.