திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 55

திருப்பாடல்கள் 55

திருப்பாடல் 55

காட்டிக் கொடுக்கப்பட்டவரின் மன்றாட்டு

பாடகர் தலைவர்க்கு;<br/>நரம்பிசைக் கருவிகளுடன்;<br/>தாவீதின் அறப்பாடல்

1 கடவுளே! என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்; நான் முறையிடும் வேளையில் உம்மை மறைத்துக் கொள்ளாதேயும்.

2 என் விண்ணப்பத்தைக் கேட்டு மறுமொழி அருளும்; என் கவலைகள் என் மன அமைதியைக் குலைத்துவிட்டன.

3 என் எதிரியின் கூச்சலாலும், பொல்லாரின் ஒடுக்குதலாலும் நடுங்குகின்றேன்; ஏனெனில், அவர்கள் எனக்கு இடையூறு பல செய்கின்றனர்; சினமுற்று என்னைப் பகைக்கின்றனர்.

4 கடுந்துயரம் என் உள்ளத்தைப் பிளக்கின்றது; சாவின் திகில் என்னைக் கவ்விக்கொண்டது.

5 அச்சமும் நடுக்கமும் என்னை ஆட்கொண்டன; திகில் என்னைக் கவ்விக்கொண்டது.

6 நான் சொல்கின்றேன்; 'புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்? நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!

7 இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! (சேலா)

8 பெருங்காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே!

9 என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்; அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும்; ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்'.

10 இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி அதைச் சுற்றி வருகின்றனர்; கேடும் கொடுமையும் அதில் நிறைந்திருக்கின்றன.

11 அதன் நடுவே இருப்பது அழிவு; அதன் தெருக்களில் பிரியாதிருப்பன கொடுமையும் வஞ்சகமுமே!

12 என்னை இழித்துரைக்கின்றவன் என் எதிரியல்ல; அப்படியிருந்தால், பொறுத்துக்கொள்வேன்; எனக்கெதிராய்த் தற்பெருமை கொள்பவன் எனக்குப் பகைவன் அல்ல; அப்படியிருந்தால், அவனிடமிருந்து என்னை மறைத்துக்கொள்வேன்.

13 ஆனால், அவன் வேறு யாரும் அல்ல; என் தோழனாகிய நீயே; என் நண்பனும் என்னோடு நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான்.

14 நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்; கடவுளின் இல்லத்தில் பெருங்கூட்டத்தினிடையே நடமாடினோம்;

15 என் எதிரிகளுக்குத் திடீரெனச் சாவு வரட்டும்; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கட்டும்; ஏனெனில் அவர்கள் தங்குமிடத்தில் அவர்கள் நடுவிலேயே தீமை புகுந்து விட்டது.

16 நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்; ஆண்டவரும் என்னை மீட்டருள்வார்.

17 காலை, நண்பகல், மாலை வேளைகளில் நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்; அவர் என் குரலைக் கேட்டருள்வார்.

18 அணிவகுத்து என்னை எதிர்த்து வந்தோர் மிகப் பலர்; என்னோடு போரிட்டோர் கையினின்று அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார்.

19 தொன்றுதொட்டு அரியணையில் வீற்றிருக்கும் கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்; அவர்களைத் தாழ்த்திவிடுவார்; (சேலா) ஏனெனில், அவர்கள் தம் நெறிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை; கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை.

20 தன்னோடு நட்புறவில் இருந்தவர்களை எதிர்த்து அந்த நண்பன் தன் கையை ஓங்கினான்; தன் உடன்படிக்கையையும் மீறினான்.

21 அவன் பேச்சு வெண்ணெயிலும் மிருதுவானது; அவன் உள்ளத்திலோ போர்வெறி; அவன் சொற்கள் எண்ணெயிலும் மென்மையானவை; அவையோ உருவிய வாள்கள்.

22 ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்.

23 கடவுளே, நீர் அவர்களைப் படுகுழியில் விழச்செய்யும்; கொலைவெறியரும் வஞ்சகரும் தம் ஆயுள் காலத்தில் பாதிகூடத் தாண்டமாட்டார்; ஆனால், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.