திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

திருப்பாடல்கள் › அதிகாரம் 88

திருப்பாடல்கள் 88

1 ஆண்டவரே! என் மீட்பின் கடவுளே! பகலில் கதறுகிறேன்; இரவில் உமது முன்னிலையில் புலம்புகின்றேன்.

2 என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக! என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்!

3 ஏனெனில், என் உள்ளம் துன்பத்தால் நிறைந்துள்ளது; என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.

4 படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக நானும் கணிக்கப்படுகின்றேன்; வலுவிழந்த மனிதரைப்போல் ஆனேன்.

5 இறந்தோருள் ஒருவராகக் கைவிடப்பட்டேன்; கொலையுண்டு கல்லறையில் கிடப்பவர்போல் ஆனேன்; அவர்களை ஒருபோதும் நீர் நினைப்பதில்லை; அவர்கள் உமது பாதுகாப்பினின்று அகற்றப்பட்டார்கள்.

6 ஆழமிகு படுகுழிக்குள் என்னைத் தள்ளிவிட்டீர்! காரிருள் பள்ளங்களுக்குள் என்னைக் கைவிட்டு விட்டீர்.

7 உமது சினம் என்னை அழுத்துகின்றது; உம் அலைகள் அனைத்தும் என்னை வருத்துகின்றன. (சேலா)

8 எனக்கு அறிமுகமானவர்களை என்னைவிட்டு விலகச்செய்தீர்; அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியேற இயலாவண்ணம் அடைபட்டுள்ளேன்.

9 துயரத்தினால் என் கண் மங்கிப்போயிற்று; ஆண்டவரே! நாள்தோறும் உம்மை மன்றாடுகின்றேன்; உம்மை நோக்கி என் கைகளைக் கூப்புகின்றேன்.

10 இறந்தோர்க்காகவா நீர் வியத்தகு செயல்கள் செய்வீர்? கீழுலகின் ஆவிகள் எழுந்து உம்மைப் புகழுமோ? (சேலா)

11 கல்லறையில் உமது பேரன்பு எடுத்துரைக்கப்படுமா? அழிவின் தலத்தில் உமது உண்மை அறிவிக்கப்படுமா?

12 இருட்டினில் உம் அருஞ்செயல்கள் அறியப்படுமா? மறதி உலகில் உம் நீதிநெறி உணரப்படுமா?

13 ஆண்டவரே! நானோ உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; காலையில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்.

14 ஆண்டவரே! என்னை ஏன் தள்ளிவிடுகின்றீர்? உமது முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைக்கின்றீர்?

15 என் இளமைமுதல் நான் துன்புற்று மடியும் நிலையில் உள்ளேன்; உம்மால் வந்த பெருந் திகிலால் தளர்ந்து போனேன்.

16 உமது வெஞ்சினம் என்னை மூழ்கடிக்கின்றது; உம் அச்சந்தரும் தாக்குதல்கள் என்னை அழிக்கின்றன.

17 அவை நாள் முழுவதும் வெள்ளப்பெருக்கென என்னைச் சூழ்ந்து கொண்டன; அவை எப்பக்கமும் என்னை வளைத்துக்கொண்டன.

18 என் அன்பரையும் தோழரையும் என்னைவிட்டு அகற்றினீர்; இருளே என் நெருங்கிய நண்பன்.