திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

யோபு › அதிகாரம் 5

யோபு 5

1 இப்போது கூப்பிட்டுப்பாரும்! யார் உமக்குப் பதிலுரைப்பார்? எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?

2 உண்மையில், அறிவிலியைத்தான் எரிச்சல் கொல்லும்; பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,

3 அறிவிலி வேரூன்றுவதை நானே கண்டேன்; ஆனால் உடனே அவன் உறைவிடத்தில் வெம்பழி விழுந்தது,

4 அவனுடைய மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை; ஊர்மன்றத்தில் அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்; மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.

5 அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்; முள்ளுக்கு நடுவிலுள்ளதையும் அவர்கள் பறிப்பர்; பேராசைக்காரர் அவன் சொத்துக்காகத் துடிப்பர்.

6 ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது; மண்ணினின்று இன்னல் விளையாது.

7 நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல, துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.

8 ஆனால், நான் கடவுளையே நாடுவேன்; அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.

9 ஆராய முடியாப் பெரியனவற்றையும் எண்ணிலடங்கா வியக்கத் தக்கனவற்றையும் செய்பவர் அவரே.

10 மண் முகத்தே மழையைப் பொழிபவரும் வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.

11 அவர் தாழ்ந்தோரை மேலிடத்தில் அமர்த்துகின்றார்; அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.

12 வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்; அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.

13 ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில் சிக்க வைக்கின்றார்; வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன;1

14 அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்; நண்பகலிலும் இரவில்போல் தடுமாறுகின்றனர்.

15 அவர் வறியவரை அவர்களின் வாயெனும் வாளினின்று காக்கின்றார்; எளியவரை வலியவரின் கையினின்று மீட்கின்றார்.

16 எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு; அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.

17 இதோ! கடவுள் திருத்தும் மனிதர் பேறு பெற்றோர்; ஆகவே, வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.2

18 காயப்படுத்தினாலும் கட்டுப்போடுபவர் அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.3

19 ஆறு வகை அல்லல்களினின்றும் அவர் உம்மை மீட்பார்; ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.

20 பஞ்சத்தில் சாவினின்றும் சண்டையில் வாள் முனையினின்றும் உம்மை விடுவிப்பார்.

21 நாவின் சொல்லடியினின்றும் நீர் மறைக்கப்படுவீர்; நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.

22 அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்; மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.

23 வயல்வெளிக் கற்களோடு உம் உடன்படிக்கை இருக்கும்; காட்டு விலங்குகளோடும் நீர் அமைதியில் வாழ்வீர்.

24 உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்; உம் மந்தையைச் சென்று காண்கையில் ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.

25 உமது வித்து பெருகுவதையும், உமது வழிமரபினர் நிலத்துப் புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.

26 பழுத்த வயதில் தளர்வின்றிக் கல்லறை செல்வீர், பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.

27 இதுவே யாம் கண்டறிந்த உண்மை! செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுண‌ர்வீர்.

குறிப்புகள்

1 1 கொரி 3:19.

2 நீமொ 3:11; எபி 12:5-6.

3 ஓசே 6:1.