திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

யோபு › அதிகாரம் 3

யோபு 3

யோபு தாம் பிறந்த நாளைச் சபித்தல்

1 இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார்.

2 யோபு கூறியது:

3 "ஒழிக நான் பிறந்த அந்த நாளே! ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச் சொல்லிய அந்த இரவே!

4 அந்த நாள் இருளாகட்டும்; மேலிருந்து கடவுள் அதை நோக்காதிருக்கட்டும்; ஒளியும் அதன்மேல் வீசாதிருக்கட்டும்.

5 காரிருளும் சாவிருட்டும் அதைக் கவ்விக்கொள்ளட்டும்; கார்முகில் அதனை மூடிக் கொள்ளட்டும்; பகலை இருளாக்குபவை அதனை அச்சுறுத்தட்டும்.

6 அவ்விரவைக் பேயிருட்டு பிடிப்பதாக! ஆண்டின் நாள்கணக்கினின்று அது அகற்றப்படுவதாக! திங்கள் எண்ணிக்கையிலும் அது சேரா தொழிக!

7 அவ்விரவு வெறுமையுற்றுப் பாழாகட்டும்; மகிழ்ச்சியொலி ஒன்றும் அதில் எழாதிருக்கட்டும்;

8 பகலைப் பழிப்போரும் லிவியத்தானைக் தூண்டி எழுப்புவோரும் அதனைப் பழிக்கட்டும்.

9 அதன் விடியற்காலை விண்மீன்கள் இருண்டு போகட்டும்; அது விடியலொளிக்குக் காத்திருக்க அதுவும் இல்லாமற்போகட்டும்; அது வைகறையின் கண்விழிப்பைக் காணாதிருக்கட்டும்.

10 ஏனெனில் என் தாயின் கருப்பையை அவ்விரவு அடைக்காமற்போயிற்றே! என் கண்களினின்று வேதனையை அது மறைக்காமற் போயிற்றே!

11 கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா? கருவறையினின்று வெளிப்பட்டவுடனே நான் ஒழிந்திருக்கலாகாதா?

12 என்னை ஏந்த முழங்கால்கள் முன் வந்ததேன்? நான் பாலுண்ண முலைகள் இருந்தேன்?

13 இல்லாதிருந்திருந்தால், நான் வெறுமனே கிடந்து துயில் கொண்டிருப்பேன்.

14 பாழானவைகளைத் தமக்குக் கட்டிக்கொண்ட மாநிலத்து மன்னர்களோடும் அமைச்சர்களோடும்

15 அல்லது பொன்னை மிகுதியிருக்கக் கொண்டு, வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின உயர்குடி மக்களோடும் நான் உறங்கியிருந்திருப்பேன்.

16 அல்லது முழுமை பெறாக் கருவைப் போலவும் ஒளியைக் காணாக் குழவியைப் போலவும் அழிந்திருப்பேன்.

17 அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர். களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.

18 சிறைப்பட்டோர் அங்கு நிம்மதியாகக் கூடியிருப்பர்; ஒடுக்குவோரின் அதட்டலைக் கேளாதிருப்பர்.

19 சிறியவரும் பெரியவரும் அங்கு இருப்பர்; அடிமை தம் ஆண்டான் பிடியில் இரான்.1

20 உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்? உள்ளம் கசந்தோர்க்கு உயிர் கொடுப்பானேன்?

21 சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்; அதைப் புதையலினும் மேலாய்க் கருதித் தேடுகிறார்கள். ஆனால் அதுவோ வந்த பாடில்லை.2

22 கல்லறை காணின் களிப்பெய்தி அகமகிழ்வோர்க்கு, வாழ்வு வழங்கப்படுவதேன்?

23 எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ, எவரைச் சுற்றிலும் கடவுள் தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ, அவருக்கு ஒளியால் என்ன பயன்?

24 பெருமூச்சு எனக்கு உணவாயிற்று; வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று.

25 ஏனெனில் நான் அஞ்சியது எதுவோ? அதுவே எனக்கு நேர்ந்தது; திகிலுற்றது எதுவோ அதுவே என்மேல் விழுந்தது.

26 எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை; அமைதி இல்லை; அல்லலே வந்துற்றது."

குறிப்புகள்

1 எரே 20:14-18.

2 திவெ 9:6.