திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

நீதிமொழிகள் › அதிகாரம் 11

நீதிமொழிகள் 11

1 கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது; முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது.

2 இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே; தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.

3 நேர்மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்; நம்பிக்கைத் துரோகி களின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.

4 கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது; நேர்மையான நடத் தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.

5 குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்; பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.

6 நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்; நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள்.

7 பொல்லார் எதிர்நோக்கியிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்; அவர்கள் எதிர் நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற்போகும்.

8 கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்; பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.

9 இறைப்பற்று இல்லாதோர் தம் பேச்சினால் தமக்கு அடுத்திருப்பாரைக் கெடுப்பர்; நேர்மையாளர் தம் அறிவாற்றலால் விடுவிக்கப் பெறுவர்.

10 நல்லாரின் வாழ்க்கை வளமடைந்தால், ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்; பொல்லார் அழிந்தால் அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.

11 நேர்மையாளரின் ஆசியாலே, நகர் வளர்ந்தோங்கும்; பொல்லாரின் கபடப் பேச்சாலே அது இடிந்தழியும்.

12 அடுத்திருப்போரை இகழ்தல் மதிகெட்டோரின் செயல்; நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு;

13 வம்பளப்போர் மறைசெய்திகளை வெளிப் படுத்திவிடுவர்; நம்பிக்கைக்குரியோரோ அவற்றை மறைவாக வைத்திருப்பர்.

14 திறமையுள்ள தலைமை இல்லையேல், நாடு வீழ்ச்சியுறும்; அறிவுரை கூறுவார் பலர் இருப்பின், அதற்குப் பாதுகாப்பு உண்டு.

15 அன்னியருக்காகப் பிணை நிற்போர் அல்லற்படுவர்; பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது.

16 கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து சேரும்; முயற்சியுள்ள ஆணுக்குச் செல்வம் வந்து குவியும்.

17 இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர்; இரக்கமற்றோரோ தமக்கே ஊறு விளைவித்துக் கொள்வர்.

18 பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல; நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்.

19 நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்; தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.

20 வஞ்சக நெஞ்சினர் ஆண்டவரின் இகழ்ச்சிகுரியவர்; மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.

21 தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; இது உறுதி; கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.

22 மதிகெட்டு நடக்கும் பெண்ணின் அழகு பன்றிக்குப் போட்ட வைர மூக்குத்தி.

23 கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பங்கள் எப்போதும் நன்மையே பயக்கும்; எதிர்காலம் பற்றிப் பொல்லார் கொள்ளும் நம்பிக்கை தெய்வ சினத்தையே வருவிக்கும்.

24 அளவின்றிச் செலவழிப்போர் செல்வ ராவதும் உண்டு; கஞ்சராய் வாழ்ந்து வறியவ ராவதும் உண்டு.

25 ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்; குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.

26 தானியத்தைப் பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்; தானியத்தை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.

27 நன்மையானதை நாடுவோர், கடவுளின் தயவை நாடுவோர் ஆவர்; தீமையை நாடுவோரிடம் தீமைதான் வந்தடையும்.

28 தம் செல்வத்தை நம்பி வாழ்வோர் சருகென உதிர்வர்; கடவுளை நம்பி வாழ்வோரோ தளிரெனத் தழைப்பர்.

29 குடும்பச் சொத்தைக் கட்டிக் காக்காத வர்களுக்கு எஞ்சுவது வெறுங்காற்றே; அத் தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமை யாவர்.

30 நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்; ஆனால், வன்செயல்* உயிராற்றலை இழக்கச் செய்யும்.1

31 நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில், பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!2

குறிப்புகள்

1 - "வன்செயல்" என்பது "ஞானி" என்று எபிரேய பாடத்தில் உள்ளது.

2 1 பேது 4:18.