எசாயா › அதிகாரம் 23
தீர் பற்றிய செய்தி
1 தீர் நாட்டைக் குறித்த திருவாக்கு: தர்சீசின் மரக் கப்பல்களே கதறி அழுங்கள்; தீரின் வீடுகள் இல்லாதபடிக்கும் வருவார் போவார் இல்லாதபடிக்கும் பாழாய்ப் போய்விட்டது; சைப்பிரசு நாட்டிலிருந்து இச்செய்தி அவர்களை வந்தடைகின்றது.
2 கடற்கரை நாட்டாரே, சீதோன் வணிகரே, வாய் திறவாதீர்; உங்கள் தூதர் கடல்கடந்து வந்தனர்.
3 பல இனத்தாரோடும் நீங்கள் வாணிகம் செய்கின்றீர்கள்; சீகோர் ஆற்றின் பெருவெள்ளத்தில் விளைந்த தானியமும், நைல் நதியின் அறுவடையுமே உங்கள் வருமானம்.
4 சீதோனே, வெட்கப்படு; ' நான் பேறுகால வேதனை அடையவில்லை; பிள்ளையைப் பெற்றெடுக்கவில்லை; இளைஞரைப் பேணவுமில்லை; கன்னிப் பெண்களைக் காக்கவுமில்லை' என்று கடல் சொல்கின்றது; கடற்கோட்டை கூறுகின்றது.
5 இச்செய்தி எகிப்தை எட்டும்போது, தீர்நாட்டின் நிலையைக் கேட்டு அவர்கள் நடுங்குவார்கள்.
6 கடற்கரை நாட்டில் வாழ்வோரே, தர்சீசுக்குக் கடந்து சென்று கதறியழுங்கள்.
7 பண்டைக்காலம் முதல் நிலைபெற்று, களிப்புமிகுந்த நகர் இதுதானா? தொலை தூரத்திற்குச் சென்று குடியேறுமாறு அடியெடுத்து வைத்த நகரா இது?
8 அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும் இளவரசர்களைப் போன்ற வணிகரைக் கொண்டதும், உலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப் பெற்றிருந்ததுமான தீருக்கு எதிராக இதைத் திட்டமிட்டது யார்?*
9 செருக்குற்றோர் சீர்குலையவும், நாட்டில் மதிப்புப்பெற்றோர் அனைவரும் அவமதிப்பு அடையவும் படைகளின் ஆண்டவர் இதைத் திட்டமிட்டார்.
10 தர்சீசின் மகளே, உன் நிலத்தை உழுது பண்படுத்து; இனி இங்குத் துறைமுகமே இராது.
11 கடலுக்கு மேலாக ஆண்டவர் தம் கையை ஓங்கியுள்ளார்; கானானின் ஆற்றல்மிக்க புகலிடங்களை அழிக்குமாறு ஆண்டவர் ஆணை பிறப்பித்துள்ளார்.
12 "ஒடுக்கப்பட்ட சீதோன் மகளாகிய கன்னிப்பெண்ணே, இனி நீ மகிழ்ச்சி அடையமாட்டாய், எழுந்து, சைப்பிரசுக்கு புறப்பட்டுப்போ; அங்கேயும் நீ அமைதி பெற மாட்டாய்" என்கிறார் அவர்.
13 இதோ, கல்தேயர் நாட்டைப்பார், இந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்; இவர்கள் சீதோன் நாட்டைக் காட்டுவிலங்குகளிடம் விட்டுச் சென்றனர்; அதைச் சுற்றிலும் தங்கள் கொத்தளங்களை எழுப்பினர். அதன் அரண்களைத் தரைமட்டமாக்கினர். நாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது.
14 தர்சீசின் கப்பல்களே! கதறியழுங்கள்; ஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன.
15 அந்நாளில், ஓர் அரசனின் வாழ் நாளான எழுபது ஆண்டுகள் தீர் நகர் மறக்கப்பட்டிருக்கும். எழுபது ஆண்டுகளுக்குப்பின், விலைமாதின் கவிதையில் காணப்படுவது தீர் நகருக்கு நேரிடும்:
16 "மறக்கப்பட்ட விலைமாதே! யாழினைக் கையிலெடுத்து, நகரைச் சுற்றி வலம் வா. உன் நினைவு நிலைக்குமாறு இன்னிசை மீட்டு; பண் பல பாடு."
17 எழுபது ஆண்டுகளுக்குப்பின் ஆண்டவர் தீர் நகரைத் தேடிவருவார். அப்பொழுது அவள் தன் முன்னைய தொழிலுக்குத் திரும்பி, மண்ணுலகின் எல்லா நாட்டு அரசுகளோடும் வேசித்தனம் செய்வாள்.
18 ஆனால் அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய் ஆண்டவருக்கென்று அர்ப்பணிக்கப்படும். அது சேமித்துவைக்கப்படுவதுமில்லை; பதுக்கி வைக்கப்படுவதுமில்லை; அவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு நிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும்.
குறிப்புகள்
* எசே 26:1-28:19; யோவே 3:4-8; ஆமோ 1:9-10; செக் 9:1-4; மத் 11:21-22; லூக் 10:13-14.