திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

எண்ணிக்கை › அதிகாரம் 12

எண்ணிக்கை 12

மிரியாம் தண்டிக்கப்படல்

1 மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர்.

2 அவர்கள், "ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?" என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார்.

3 பூவுலகின் அனைத்து மாந்தரிலும் மோசே சாந்தமிகு மானிடராய்த் திகழ்ந்தார்.

4 உடனே ஆண்டவர் மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், "நீங்கள் மூவரும் சந்திப்புக் கூடாரத்தருகே வாருங்கள்" என்றார். அவர்கள் மூவரும் வந்தனர்.

5 மேகத்தூண் ஒன்றில் ஆண்டவர் இறங்கி வந்து கூடார வாயிலருகே நின்று ஆரோனையும் மிரியாமையும் அழைத்தார்; அவர்கள் இருவரும் முன் வந்தனர்.

6 அவர் கூறியது: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள் இறைவாக்கினன் ஒருவன் இருந்தால் ஆண்டவராகிய நான் ஒரு காட்சியின் வழியாக அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன். கனவில் அவனோடு பேசுவேன்.

7 ஆனால், என்அடியான் மோசேயோடு அப்படியல்ல; என் வீடு முழுவதிலும் அவனே நம்பிக்கைக்குரியவன்;1

8 நான் அவனோடு பேசுவது மறைபொருளாக அல்ல, நேர்முகமாகவும் தெளிவாகவும் இருக்கும். ஆண்டவர் உருவையும் அவன் காண்கிறான். பின்னர், ஏன் என் அடியான் மோசேக்கு எதிராகப் பேச நீங்கள் அஞ்சவில்லை?

9 மேலும், ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் மூண்டது; அவர் அகன்று சென்றார்.

10 கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனிபோன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது; ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாயிருக்கக் கண்டார்.

11 ஆரோன் மோசேயிடம், "என் தலைவரே! அறிவீனமாக நாங்கள் செய்த பாவத்தை எங்கள்மேல் சுமத்த வேண்டாம்;

12 தாயின் வயிற்றிலிருந்து செத்துப் பிறந்த அரைகுறைக்குழந்தை போன்று இவள் ஆகாதிருக்கட்டும்" என்றார்.

13 மோசே ஆண்டவரிடம் முறையிட்டு, "கடவுளே, இவளைக் குணமாக்க வேண்டுகிறேன்" என்றார்.

14 ஆனால், ஆண்டவர் மோசேயிடம், "அவள் தந்தை அவள் முகத்தில் காறித் துப்பியிருந்தால், ஏழுநாள்கள் அவள் வெட்கப்பட வேண்டாமோ? பாளையத்துக்குப் புறம்பே அவள் ஏழுநாள்கள் விலக்கப்பட்டிருக்கட்டும்; அதன் பின், மீண்டும் அவள் உள்ளே கொண்டுவரப்படலாம்" என்றார்.2

15 அவ்வாறே மிரியாம் ஏழு நாள்கள் பாளையத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் மறுபடியும் உள்ளே கொண்டு வரப்படும்வரை மக்கள் தங்கள் பயணத்தைத் தொடரவில்லை.

16 அதன்பின் மக்கள் அசரோத்திலிருந்து புறப்பட்டுப் பாரான் பாலை நிலத்தில் பாளையம் இறங்கினர்.

குறிப்புகள்

1 எபி 3:2.

2 எண் 5:2-3.