திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

விடுதலைப் பயணம் › அதிகாரம் 20

விடுதலைப் பயணம் 20

கடவுள் தந்த கட்டளைகள்

இச 5:1-21

1 கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே:

2 நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர்.

3 என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.

4 மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம்.

5 நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில், உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.1

6 மாறாக, என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.2

7 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.3

8 ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு.4

9 ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய்.

10 ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே, அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அந்நியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம்.5

11 ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு, ஆண்டவர் ஓய்வு நாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.6

12 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட.7

13 கொலை செய்யாதே.8

14 விபசாரம் செய்யாதே.9

15 களவு செய்யாதே.10

16 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.11

17 பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.12

மக்களின் அச்சம்

இச 5:22-33

18 மக்கள் அனைவரும் இடி மின்னல்களையும் எக்காள முழக்கத்தையும் புகையையும் மலையையும் கண்டனர்; கண்டு, மக்கள் நடுநடுங்கித் தூரத்தில் நின்று கொண்டு,

19 மோசேயை நோக்கி, "நீர் எங்களோடு பேசும். நாங்கள் கேட்போம். கடவுள் எங்களோடு பேசவே வேண்டாம். ஏனெனில், நாங்கள் செத்துப் போவோம்" என்றனர்.13

20 மோசே மக்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்; கடவுள்மீது உங்களுக்கு ஏற்படும் அச்சத்தால் நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்களா என்று உங்களைச் சோதித்தறியவே அவர் இவ்வாறு தோன்றினார்" என்றார்.

21 மக்கள் தொலையில் நின்றுகொண்டிருக்க மோசே கடவுள் இருந்த காரிருளை அணுகினார்.

பலி பீடம் பற்றிய சட்டங்கள்

22 ஆண்டவர் மோசேயை நோக்கிப் பின்வருமாறு உரைத்தார்! இவ்வாறு நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்: "நான் வானத்திலிருந்து உங்களோடு பேசினேன் என்பதை நீங்கள் கண்டீர்கள்.

23 எனக்கு இணையாக வைக்க வெள்ளியாலான தெய்வங்களையும், பொன்னாலான தெய்வங்களையும் உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ள வேண்டாம்.

24 எனக்கென்று மண்ணால் பீடம் அமைத்து, உன் ஆடுகளையும் மாடுகளையும் அதன்மேல் எரி பலிகளாகவும், நல்லுறவுப் பலிகளாகவும் செலுத்து. நான் என்பெயரை நினைவுபடுத்தச் செய்யும் இடங்கள் யாவற்றிலும், நான் உன்னிடம் வந்து உனக்கு ஆசி வழங்குவேன்.

25 எனக்காகக் கற்பீடம் அமைத்தால், செதுக்கிய கற்கள்கொண்டு கட்டவேண்டாம். ஏனெனில், உனது உளி அதன்மேல் பட்டால், நீ அதனைத் தீட்டுப்படுத்துவாய்.14

26 உன் திறந்தமேனி என் பீடத்தின்மேல் தெரிந்து விடாதபடி, படிகள் வழியாய் அதன்மேல் ஏறிச்செல்ல வேண்டாம்.

குறிப்புகள்

1 விப 34:17; லேவி 19:4; 26:1; இச 4:15-18; 27:15.

2 விப 34:6-7; எண் 14:18; இச 7:9-10.

3 லேவி 19:12.

4 விப 16:23-30; 31:12-14.

5 விப 23:12; 31:15; 34:21; 35:2; லேவி 23:3.

6 தொநூ 2:1-3; விப 31:17.

7 இச 27:16; மத் 15:4; 19:19; மாற் 7:10; 10:19; லூக் 18:20; எபே 6:2-3.

8 தொநூ 9:6; லேவி 24:17; மத் 5:21; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2:11.

9 லேவி 20:10; மத் 5:27; 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9; யாக் 2:11.

10 லேவி 19:11; மத் 19:18; மாற் 10:19; லூக் 18:20; உரோ 13:9.

11 விப 23:1; மத் 19:18; மாற் 10:19; லூக் 18:20.

12 உரோ 7:7; 13:9.

13 எபி 12:18-19.

14 இச 27:5-7; யோசு 8:31.