திருவிவிலியம்பொது மொழிபெயர்ப்பு
⌕ தேடல்
பழைய ஏற்பாடு

குறிப்பேடு - இரண்டாம் நூல் › அதிகாரம் 27

குறிப்பேடு - இரண்டாம் நூல் 27

யூதாவின் அரசன் யோத்தாம்

2 அர 15:32-38

1 யோத்தாம் அரசனானபோது அவனுக்கு வயது இருபத்தைந்து. அவன் எருசலேமில் பதினாறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். சாதோக்கின் மகள் எரூசா என்பவளே அவன் தாய்.

2 தன் தந்தை உசியாவைப்போல் அவன் ஆண்டவரின் பார்வையில் நேரியன செய்து வந்தான்; அவனைப்போலன்றி ஆண்டவரின் இல்லத்தில் நுழையவில்லை. மக்களோ தொடர்ந்து தீய வழியில் நடந்தனர்.

3 அவன் ஆண்டவரது இல்லத்தின் உயர் வாயிலைக் கட்டியதுடன், ஒபேலின் மதில்களைப் பெரிதாகக் கட்டினான்.

4 அவன் யூதாவின் மலைகளில் நகர்களையும், காடுகளில் கோட்டைகளையும் கொத்தளங்களையும் கட்டினான்.

5 அவன் அம்மோனியரின் மன்னனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றான். அந்த ஆண்டில் அம்மோனியர் அவனுக்கு நாலாயிரம் கிலோகிராம்* வெள்ளியும், பத்தாயிரம் கலம்** கோதுமையும், பத்தாயிரம் கலம் வாற்கோதுமையும் அளித்தனர். இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளிலும் அவ்வாறே அம்மோனியர் அவனுக்கு அளித்தனர்.12

6 யோத்தாமின் வழிகள் அவன் கடவுளாம் ஆண்டவரின் திருமுன் நேரியனவாக இருந்தமையால், அவன் வலிமையுடையவன் ஆனான்.

7 யோத்தாமின் பிற செயல்களும், அவனுடைய எல்லாப் போர்களும், அவன் வழிமுறைகளும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.

8 அவன் அரசனான போது அவனுக்கு வயது இருபத்தைந்து. பதினாறு ஆண்டுகள் எருசலேமில் அவன் ஆட்சி செய்தான்.

9 யோத்தாம் தன் மூதாதையருடன் துயில்கொண்டு, தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவன் மகன் அவனுக்குப் பின் அரசனானான்.

குறிப்புகள்

1 'நூறு தாலந்து' என்பது எபிரேய பாடம்.

2 'கோர்' என்பது எபிரேய பாடம்.